Tuesday, February 22, 2011

மன்னிப்பு கேட்டார் பாண்டிங்

ஆமதாபாத்: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில், வீரர்கள் அறையில் இருந்த "டிவி'யை தனது பேட்டினால் அடித்து உடைத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங். இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை வென்றது.
இப்போட்டியின் போது ஜிம்பாப்வே வீரர் மபோபுவின் "சூப்பர் த்ரோவில்' பாண்டிங் ரன் அவுட்டானார். இந்த ஆத்திரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறிய இவர், வீரர்களின் "டிரஸ்சிங்' அறைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த "டிவி'யில் இவரது ரன் அவுட் திரும்ப, திரும்ப காட்டப்பட்டுள்ளது. இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற இவர், தனது பேட்டினால், "டிவி' யை உடைத்துள்ளார். இது 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது.
பாண்டிங் மன்னிப்பு:
இச்சம்பவத்தை முதலில் மறுத்த ஆஸ்திரேலிய "மீடியா' மானேஜர் பாட்டர்சன், பின் பாண்டிங் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்ட பின், தனது செயலுக்கு உடனடியாக பாண்டிங் மன்னிப்பு கேட்டார். பின் வேறு "டிவி'யை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்,'' என்றார்.
தொடரும் அடாவடி:
ஆஸ்திரேலிய வீரர்களின் அடாவடி தொடர்கிறது. கடந்த 2003 ஆஷஸ் தொடரில் எல்.பி.டபிள்யு., அவுட் ஆன வெறுப்பில், "டிரஸ்சிங் ரூமில்' இருந்த கண்ணாடி கதவை உடைத்து, பின் அபராதம் கட்டினார் ஹைடன். கடந்த அக்டோபரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், சச்சின் இரட்டை சதம் அடிக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஏமாற்றத்தை. காமன்வெல்த் தொடரில் பங்கேற்க டில்லி வந்த ஆஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, விளையாட்டு கிராமத்தில் இருந்த பொருட்களை உடைத்து, "வாஷிங் மெஷினை' தூக்கி, வெளியே எறிந்தனர். தற்போது பாண்டிங்கும், அடாவடித்தனமான செயலில் இறங்கியுள்ளார்.
அருண் லால் ஆவேசம்
பாண்டிங் செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அருண் லால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" உலக கோப்பை தொடரில் விளையாடுகிறோம் என்பதை பாண்டிங் நினைவில் கொள்ள வேண்டும். இவர் அடுத்து வரும் தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
ஐ.சி.சி.,யிடம் புகார்
பாண்டிங் செயல் குறித்து குஜராத் கிரிக்கெட் சங்க (ஜி.சி.ஏ.,) செயலர் ராஜேஷ் படேல் கூறுகையில்,"" பாண்டிங் எல்.சி.டி. "டிவி' யை உடைத்தது உண்மை தான். அவுட்டான ஏமாற்றத்தில் இப்படி நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். தவிர, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) முறைப்படி புகார் கூறியுள்ளோம். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ஐ.சி.சி.,) அனுப்பப்பட்டது. அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.

No comments:

Post a Comment