Saturday, February 12, 2011

புரட்சி கேப்டன் இம்ரான் கான்

ஐந்தாவது உலக கோப்பை தொடர் 1992ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. இம்முறை வண்ண உடையில் வீரர்கள், வெள்ளை நிற பந்துகள், ஒளிவெள்ளத்தில் பகலிரவு ஆட்டங்கள் போன்ற புதுமைகள் அறிமுகமாகின. நிறவெறி காரணமாக 21 ஆண்டுகள் தடையில் இருந்து மீண்ட தென் ஆப்ரிக்க அணி, இத்தொடரில் பங்கேற்றது. மொத்தம் 9 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் "ரவுண்ட்-ராபின்' முறையில் நடத்தப்பட்டன.
இத்தொடரில் இந்திய அணி பெருத்த ஏமாற்றம் அளித்தது. 8 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்ததால், புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பெற்றது. இதனால், லீக் சுற்றுடன் நடையை கட்டியது.
இம்ரான் ஊக்கம்:
பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. பின் இங்கிலாந்திடம் 74 ரன்களில் சுருண்டது. இப்போட்டி மழையால் கைவிடப்பட, தோல்வியில் இருந்து தப்பியது. இந்த நேரத்தில் கேப்டன் இம்ரான் கான் சக வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். இதையடுத்து அடிபட்ட புலியாக பாகிஸ்தான் அணியினர் எழுச்சி கண்டனர்.
1 பந்தில் 21 ரன்:
முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதி பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், மழை குறுக்கிட சிக்கல் ஏற்பட்டது. அப்போதைய விதிமுறைப்படி எதிரணி அதிக ரன்கள் எடுத்த ஓவர்களின் அடிப்படையில், வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும். இதன்படி தென் ஆப்ரிக்க அணி 1 பந்தில் 21 ரன் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எட்ட முடியாத இந்த இலக்கு காரணமாக, 43 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது.
அக்ரம் அபாரம்:
மெல்போர்னில் நடந்த பைனலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் இம்ரான் கான்(72), மியான்தத்(58) இணைந்து அடித்தளம் அமைத்தனர். கடைசி கட்டத்தில் இன்சமாம்(42) அதிரடியாக ஆட, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி அக்ரம் வேகத்தில் திணறியது. 49.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, முதல் முறையாக கோப்பை வென்று சாதித்தது.
---------------
"ஆல்-ரவுண்டர்' அக்ரம்
பாகிஸ்தான் அணி உலக கோப்பை வெல்ல வாசிம் அக்ரம் பெரிதும் காரணம். வேகப்பந்துவீச்சில் மட்டும் அல்லாமல் இக்கட்டான நேரங்களில் பேட்டிங்கிலும் கைகொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் 33 ரன்கள் மற்றும் 3 விக்கெட் வீழ்த்திய இவர், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் முதலிடம்(10 போட்டி, 18 விக்கெட்) பிடித்தார்.

No comments:

Post a Comment