Saturday, February 12, 2011

"ஹாட்ரிக்' சாதனை படைத்த ஆஸி.,

ஒன்பதாவது உலக கோப்பை தொடர் கடந்த 2007ல், முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின.
இத்தொடரின் லீக் சுற்றில் அதிர்ச்சி முடிவுகளை காண முடிந்தது. அனுபவ பாகிஸ்தான் அணி(132), அயர்லாந்திடம்(133/7) வீழ்ந்தது. இதே போல முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி(191), வங்கதேசத்திடம்(192/5) தோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்திய துணை கண்டத்தின் இரண்டு நட்சத்திர அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேற, உலக கோப்பை போட்டிகள் களை இழந்தன.
முதலாவது அரையிறுதியில் இலங்கை அணி, நியூசிலாந்தை வென்றது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
கில்கிறிஸ்ட் அதிரடி:
பார்படாசில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக ஓவர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் தந்தார். பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்த இவர், 149 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக கோப்பை பைனலில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். ஹைடன்(38), கேப்டன் பாண்டிங்(37) அசத்த, 38 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
இலக்கு மாற்றம்:
கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஜெயசூர்யா(63), சங்ககரா(54) நம்பிக்கை தந்தனர். அடுத்த வந்தவர்கள் ஏமாற்றினர். இந்த நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட, 36 ஓவரில் 269 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 33வது ஓவரில் வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இப்போட்டியை அடுத்த நாள் நடத்தலாம் என அம்பயர்கள் தெரிவித்தனர். ஆனால், இலங்கை கேப்டன் ஜெயவர்தனா ஆட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்தார். இறுதியில் இலங்கை அணி 36 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது. "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்தது.
-----------
உல்மர் மரணத்தில் மர்மம்
உலக கோப்பை தொடரில் இம்முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர், தனது ஓட்டல் அறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இங்கிலாந்தை சேர்ந்த இவரை, கிரிக்கெட் சூதாட்ட கும்பல் கொலை செய்ததாக சர்ச்சை எழுந்தது. இது பற்றி விசாரித்த ஜமைக்கா போலீசார், உல்மர் மரணம் இயற்கையானது என்று கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment